(குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்)
மனம் தேடுவது ஒரு சிறு அங்கீகாரம்... நம்மைப் பெருமையாகப் பேசுகிற நண்பன், தோழன் , குடும்பத்தார் அல்லது ஊர்க்காரர்கள் யாராவது அருகாமையில் இருக்கிறார்களா என்று ஏங்கித் தவிக்கும். ஊராரிடம் எல்லாம் தன்வூட்டுக்காரர் அருமை,பெருமைகளைப் பீற்றிக்கொள்ளும் மனைவிகள் கூட, முகத்துக்கு நேராகக் கணவனிடம் பெருமைகளைப் பேசுவது கிடையாது. "நீ பெத்த புள்ளைதானே..." என்று பிள்ளைகளின் சிறுமைகளைக் கூட அவன் கணக்கில் ஏற்றிவிடுவார்கள். வாழ்ந்தபொழுது அவனுடைய முகத்துக்கு நேராக ஒரு வார்த்தை பெருமையாகப் பேசாதவர்கள். செத்தபிறகு சுடுகாட்டுக்கொட்டகையில் உட்கார்ந்துகொண்டு "எவ்வளவு நல்ல மனுசன் தெரியுமா...!, ஒரு ஈ, எறும்புக்குக் கூட துன்பம் தரக்கூடாதென்று வாழ்ந்தவர் ...!" என்று பேசிக்கொண்டிருப்பார்கள். எழுத்தாளர் ஜி.நாகராஜன் கூறியது போல "மனிதன் மகத்தான சல்லிப்பயல்" "உள்ளூர் மாடு விலை போகாது” என்பார்கள். எங்கேயோ இருப்பவர்களைக் கொண்டாடுகிற மனிதர்கள், அருகாமையில் இருப்பவர்களை எளிதாகக் கடந்து செல்கிறார்கள் ஒருவித அலட்சியத்துடன். முகர்ஜி - ஓர் சிறிய அங்கீகாரத்திற்காக ஏங்கியவன்...! அவன் இங்கிருந்து கிளம்புகிறபொழுது ஏற்பட்ட உரசலில்... அவனுடைய மனது கலங்கித் தவித்த ஒன்று, அவன் மீதான ஏளனமும், இளக்காரமும் கூடிய பார்வையும், பழக்கமும். அவனுடைய சகோதரி வாயிலாகக் கிடைத்த... கடைசியாக அவன் எழுதிய குறிப்புகளில்... "அவனுடைய மனது அங்கீகாரத்திற்காக ஏங்கித் தவித்திருப்பதை உணர முடிந்தது." இத்தனை யாண்டுகளில் அவன் அழைத்தபொழுது பேசியிருக்கலாம், மன்னித்திருக்கலாம்... அவனை மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் இகழ்ந்திருக்கலாம், ஆனால் உன்னை எனக்குப் பிடிக்கும் என்று சொல்லியிருக்கலாம்... எத்தனையோ 'லாம்' - கள். ஆனால், அவன் கொட்டிய சொற்களில் ஏற்பட்ட காயங்களை ஒரு வேட்டைநாயைப் போல நக்கி, நக்கி காலத்தைக் கடத்தி விட்டேன். இனி, அழைத்தால் எடுக்க அவன் இல்லை என்கிற உண்மை முகத்தில் அறைகிறது. கண்ணீர் முட்டுகிறது, துயரம் அலை, அலையாய் எழுந்து வருகிறது... மனம் ஆழ்கடல் தோணியாய் அல்லலுறுகிறது. முற்பகுதிகள்... https://pktpaariarasu.blogspot.com/2021/06/3.html
https://pktpaariarasu.blogspot.com/2021/06/2.html
https://pktpaariarasu.blogspot.com/2021/06/1.html
0 கருத்துகள்:
கருத்துரையிடுக