வெள்ளி, 25 ஜூன், 2021

புனைவு - இருளோடு உறவாடிய பொழுதுகள் - பகுதி - 3 (ஒளிரும் இருள்)

 (குறிப்பு : புனைவு எழுத்துகளில் உண்மையைத் தேடாதீர்கள். கொஞ்சம் உண்மையும், நிறையக் கற்பனையும் கலந்த நெடுந்தொடர்)

ஒளிரும் இருள்

இருள் ஒளிருமா…!?

ஒளிரும்…!

இரவு விடுதிகளில் (night club) இருள் ஒளிரும்.

நிறைந்த இருளில்  (complete darkness) தான் மெலமைன்(Melamine)  என்கிற ஹார்மோன் சுரக்குமாம்....! இருட்டு என்பதற்கும் இருள் என்பதற்குமே நிறைய வேறுபாடு உண்டு.

முழுமையான இருளை உணர மிகவும் கடினப்பட வேண்டிய சூழலில் நாம் வாழ்கிறோம்.... அது கடந்த காலங்களில் மிக இயல்பாக இருந்தது.

மிகச் சமீபத்தில் இருள் என்பதை நான் உணர்ந்தபொழுது என்பது... ஓர் கானகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நிகழ்வு.

இருளை உருவாக்குவதற்கு.... முதலில் செலவு செய்து நிறைய முறைகளில் அறைக்குள் இருளை உருவாக்கியிருப்பார்கள், பிறகு அந்த அறைக்குள் பல்வேறு கோணங்களில் ஒளிக்கற்றைகளைச் சுழற்றி பாய்ச்சும் வண்ண உமிழ் விளக்குகளை பொருத்தி இருப்பார்கள். அந்த ஒளிக்கற்றைகள் ஒன்றையொன்று வெட்டும் வெளியில் ஓர் இருள் இருக்கும். அந்த இருள் ஒளிரும்.

ஒவ்வொரு விடுதியிலும் வெவ்வேறு இடங்களில் ஒளிரும் இருள் வந்து போகும். பெரும்பாலும் அதை கசமுசா ஸ்பாட் எனப்படும். அந்த இடங்களில் இருக்கும் இருக்கைகள் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

மைதானம் அளவில் இருக்கிற விடுதியில் சந்துகளும், மூலை முடுக்குகளும் இருக்கும். சிறிய விடுதிகள் கூட ‘ட’ மாதிரி அல்லது ‘ப’ மாதிரி அமைத்திருப்பார்கள்.

பிரம்மாண்ட விடுதிகளின் விளக்கு அமைப்புகளில் Lighting engineering  -ன் அத்தனை சாத்தியங்களையும் செய்திருப்பார்கள். பார் கவுண்டர் வடிவமைப்பு மிக முக்கியமானது. அதற்காக பார்த்து, பார்த்து வடிவமைக்கப்பட்ட பார் கவுண்டர்கள் இருக்கின்றன.

முகர்ஜி இரவு விடுதிகளின் அத்தனை வகைகளையும் அறிமுகம் செய்து வைத்தான். குடிப்பதற்கு 50க்கு மேற்பட்ட குவளைகள் இருப்பதைக் காண்பித்திருக்கிறான். வெறும் பிளாஸ்டிக் குவளைகளில் கலந்து குடிப்பதற்கும்… வித, விதமாக வடிவமைக்கப்பட்ட குவளைகளில் குடிப்பதின் வித்தியாசத்தை உணர வைத்திருக்கிறான்.

சிங்கையின் இரவு வாழ்க்கையும் (night life) , விடுதிகளும் (clubs) மற்ற இரவு வாழ்க்கை நகரங்களுடன் ஒப்பிட்டு ஒன்றுமே இல்லை என்பான் முகர்ஜி.

நான் திகைத்து நிற்பேன்…!

ஒருமுறை, மிகப்பெரிய விடுதியில் நுழைந்தோம்… என்ன குடிக்கிறாய் என்றான்…!?

வழக்கம்போல பீர் என்றேன்… போடா என்று சொல்லிவிட்டு… பக்கத்திலிருந்த இருக்கைகளைப் பார்த்தான், ஒரு சீனன் cognac வாங்கி இரண்டு குட்டிகளுடன் குடித்துக்கொண்டிருந்தான்.

என்னிடம் கேட்டான் அந்த cognac எவ்வளவு விலை இருக்கும் தெரியுமா என்றான்…!

தெரியவில்லை என்றேன்… முப்பதாயிரம் வெள்ளிக்கு மேல் என்று சொல்லிவிட்டு இரு, வருகிறேன் என்று போனான்.

ஒரு cognac போத்தலுடன் வந்து அமர்ந்தான். எவ்வளவு என்றேன்…!?

பத்தாயிரம் வெள்ளிகள்…. மூச்சு நின்று விட்டது, அதிர்ச்சியில் வியர்த்து, வெளிறி விட்டேன்.

அதுவரை 250 வெள்ளிக்கு XO வாங்கி குடித்ததையே வாழ்நாள் சாதனையாகப் பீற்றிக்கொண்டிருந்த எனக்கு மூச்சிரைத்தது...!

காசு கொடுத்துவிட்டேன் கவலைப்படாதே… என்றான்.

100 ஆண்டுகளுக்கு மேலாக ஊறிய திராட்சை ரசம், வாசனையே ஆளை மயக்கியது.

விடிய, விடியக் குடித்தோம்…! பேசினோம்…! குடித்தோம்…! பேசினோம்…!

ஒரு நாள் இப்படியென்றால்… இன்னொரு நாள் எங்காவது… சீப்பாக டைகர் பீர் கிடைக்குமா என்று அலைவான்.

முகர்ஜி சொல்வான் நான் ஆலோசகராக () வாங்குவது முழுவதும் எனது ஊதியம் கிடையாது. அது மனிதர்களைக் கையாளுவதற்குக் கொடுக்கப்படும் பணம், அதிலிருந்து தான் நமக்கும் செலவு செய்துகொள்கிறேன் என்பான்.

உயரத்திலிருந்து பள்ளத்தில் விழுவதை முயல்கிற வாழ்க்கை...!

முற்பகுதிகள்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails